எல்சிடி டிவி தயாரிப்பு ஆலையை, 1.9 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டாக துவங்க, சோனி நிறுவனமும், தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனமும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் எல்சிடி டிவிகளுக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்தே, புதிய ஆலையை நிறுவ இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷார்ப் நிறுவனம் அமைக்க உள்ள 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான எல்சிடி டிவி தயாரிப்பு ஆலையில், 33 சதவீத பங்குகளை ஜப்பானின் சோனி நிறுவனம் வாங்குவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், எல்சிடி டிவி உற்பத்தி ஆலை அமைப்பது தொடர்பாக சோனி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

