தமிழ்த் திரையுலகில் ஸ்டண்ட் மாஸ்டராக நன்கு அறியப்பட்டவர் கனல் கண்ணன். இவர் இப்போது ‘சற்று முன் கிடைத்த தகவல்’ படத்தின் மூலம் கதாநாயகனாகி இருக்கிறார். ‘பீமா’வில் சண்டைகளின் பின்னணியில் மாஸ்டராக இருந்தவர்.
கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ள கனல் கண்ணனுடன் ஒரு சந்திப்பு….
சினிமாவில் நுழையும்போதே நடிக்கும் எண்ணம் இருந்ததா?
இல்லை. எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம் வள்ளியாபுரம். அந்தக் கிராமத்திலிருந்து சென்னை வந்து சினிமாவில் சேர்ந்தேன். நான் முதலில் சண்டை இயக்குனராக வேண்டும் என்றுதான் விரும்பினேன். என் குரு ராம்போ ராஜ்குமார். அவரிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். இந்த ஸ்டண்ட் துறையில் புகழ் பெறவே விரும்பி, அதுபோலவே ஆனேன்.
என்னை ஒரு மாஸ்டராக அறிமுகப்படுத்தியது கே.எஸ். ரவிகுமார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த ‘சேரன் பாண்டியன்’ படத்தில்தான் நான் முதல்முறையாக ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானேன். தற்போது 200 படங்களை முடித்து விட்டேன்.
நிஜமாகவே ஆரம்பத்தில் நடிக்கும் ஆசை இல்லை. ஓரிரு படங்களில் விளையாட்டாகத் தலைகாட்ட வைத்தார்கள். அதைப் பார்த்து என்னை அடையாளம் கண்டு ஆரவாரம் செய்யத் தொடங்கியதும் எனக்குள் நடிப்பு ஆசை வேர் விட்டது. சிறு சிறு வேடங்களில் நடித்தேன். அவார்டுக்காக ஒரு படம் எடுத்தார்கள். ‘டியூப்லைட்’ என்பது பெயர். அதில் நான்தான் முக்கிய வேடம்.
‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ வாய்ப்பு எப்படி வந்தது?
தக்காளி சீனிவாசன் சார் என்னை கூப்பிட்டுக் கொடுத்த வாய்ப்புதான் இது. ஆரம்பத்தில் சற்று தயங்கினேன். அவர் கொடுத்த ஊக்கத்தில் நானும் நன்றாக நடித்து, அவரது பாராட்டைப் பெற்று விட்டேன். என்மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்காக அவருக்கு நான் என்றும் நன்றி சொல்வேன். அந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருடன் காமடியும் கலந்ததாக இருக்கும். எனக்கு அது பொருத்தமாக இருந்ததால் படம் நன்றாக வந்திருக்கிறது. த்ரில்லர் படம் காமடியாகவும் இருப்பது அபூர்வம். அது இதில் சாத்தியமாகியிருக்கிறது.
இனி தொடர்ந்து நாயகனாக நடிப்பீர்களா?
என்னைப் பற்றி கே.எஸ்.ரவிகுமார் சார் பேசும்போது, ‘உனக்கு எது பொருத்தமோ அதை தேர்வு செய்து நடி. உன் முகத்துக்கு எது தேவையோ அதை ஏற்று நடித்தால் வெற்றி பெறுவாய்’ என்றார். அதை நான் மறக்க மாட்டேன். எனக்குப் பொருத்தமாக உள்ள வேடங்களை மட்டுமே ஏற்று நடிப்பேன். இந்த ‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே நடிப்பில் தீவிரமாக இறங்குவது பற்றி யோசித்து முடிவெடுப்பேன்.
எல்லா கதாநாயகர்களுக்கும் ஸ்டண்ட் அமைத்து விட்டீர்களா?
தமிழ்நாட்டில் ரஜினி, கமல் தொடங்கி சிம்பு வரை மாஸ்டராக பணியாற்றி விட்டேன். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி வரை தெலுங்கில் சிரஞ்சீவி போன்ற முக்கியமான எல்லாருடனும் பணியாற்றிய அனுபவம் உண்டு. கன்னடத்திலும் அப்படித்தான். ஆனால் எனக்கும் ஒரு குறை உண்டு. நான் இன்னும் விஜயகாந்த் படங்களில் மட்டும் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை பார்த்ததில்லை. காரணம் அவர் தனக்கென தனி மாஸ்டரை வைத்திருக்கிறார். அதனால் எனக்குப் பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.
‘பீமா’வில் ஆங்கிலப் படங்களைப் போல சண்டைகள் அமைத்தது எப்படி?
எனது எல்லாத் திறமையும் எனக்குத் தொழில் கற்றுக் கொடுத்த குரு ராம்போ ராஜ்குமாரையே சேரும். என்னை `கனல்’ கண்ணன் என்று பெயர் வைத்ததே அவர்தான். நான் என் குருவிடமும் அனுபவங்கள் மூலமும் படங்களைப் பார்த்தும் கற்றவற்றையே என் படங்களில் வெளிப்படுத்துகிறேன்.
‘பீமா’ படத்தின் சண்டைக்காட்சிகள் பேசப்படுகின்றன. பலபேர் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் நான் மட்டுமல்ல. முழு ஒத்துழைப்பு கொடுத்த விக்ரம், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து அனுமதித்த இயக்குனர் லிங்குசாமி, செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் களம் அமைத்துக் கொடுத்த தயாரிப்பாளர் ரத்னம், இப்படி பலரின் உழைப்பால் ஒத்துழைப்பால்தான் ‘பீமா’ இவ்வளவு சிறப்பாக வந்திருக்கிறது.
இப்போது பணியாற்றும் படங்கள்?
நான் நடித்தாலும் மாஸ்டராக பணியாற்றுவதை விட மாட்டேன். ‘சற்றுமுன் கிடைத்த தகவல்’ படத்தில் நடித்தபோது கூட என் மாஸ்டர் கமிட்மெண்ட்களை தேதிகளை அனுசரித்து விட்டுத்தான் நடித்தேனே தவிர மாஸ்டர் வேலையை விட்டுவிடவில்லை. இப்போது ‘கந்தசாமி’, ‘சிலம்பாட்டம்’, ‘எல்லாம் அவன் செயல்’ ஏவிஎம் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் உள்பட ஏழு படங்களில் நான் மாஸ்டராக ஸ்டண்ட் அமைத்து வருகிறேன்.















